நீர் மேலாண்மைக்காக இரும்பு குழாய்கள் பயன்படுத்திய தமிழ்_மன்னர்கள்....!

தஞ்சை மாநகராட்சி பகுதியில் பழைய பாலங்கள் அகற்றப்பட்டு புதிய பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகின்றன.
 3 இரும்பு குழாய்கள் கண்டெடுப்பு
.
கட்டுமான பணிக்காக மண் தோண்டப்பட்ட போது பூமிக்கு அடியில் பெரிய இரும்புகுழாய் தென்பட்டது. உடனே அந்த குழாய் மேலே எடுக்கப்பட்டது. பின்னர் தோண்டிய போது அதில் மேலும் 2 இரும்பு குழாய்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த குழாய்கள் 10 அடி முதல் 12 அடி வரை நீளம் உடையது. இதில் ஒரு குழாயில் 2 புறமும் ஓட்டை உள்ளது. மற்றொரு குழாயில் ஒருபுறம் மட்டும் ஓட்டை உள்ளது. இன்னொரு பெரிய குழாயில் 2 புறமும் மூடப்பட்டு பக்கவாட்டின் ஒரு பகுதியில் 2 வால்வும், இன்னொரு புறத்தில் 3 வால்வுகளும் காணப்படுகின்றன.
.
இந்த 3 குழாய்களும் மண்ணுக்கு அடியில் இருந்ததால் அவை துருப்பிடித்த நிலையில் காணப்படுகிறது. மேலும் இந்த குழாய்கள் மன்னர்கள் காலத்தில் பீரங்கியில் பயன் படுத்தப்பட்ட குழாய்களாக இருக்கலாம் என கருதி ஏராளமானோர் வந்து பார்த்தனர். பின்னர் இது குறித்து விசாரித்த போது அந்த குழாய்கள் மன்னர்கள் காலத்தில் தண்ணீர் கொண்டு செல்வதற்காக பூமிக்கு அடியில் பயன்படுத்தப்பட்ட குழாய்கள் என்பது தெரிய வந்தது.
.
மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்டது
.
இது குறித்து தஞ்சை சரசுவதி மகால் நூலக பண்டிதர் மணிமாறன் கூறுகையில், “தஞ்சை பெரியகோவில் அருகே உள்ள சிவகங்கை பூங்கா குளம் மழைநீர் சேகரிப்பு குளம் ஆகும். மன்னர்கள் காலத்தில் வெட்டப்பட்ட இந்த குளத்தில் மழை காலத்தில் பெரியகோவில் பகுதிகளில் உள்ள மழைநீர் அனைத்தும் சிவகங்கை பூங்கா குளத்தில் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து தஞ்சை மாநகரில் உள்ள பல்வேறு குளங்களுக்கும், அரண்மனைகளில் உள்ள கிணற்றுக்கும் பூமிக்கு அடியில் தண்ணீர் கொண்டு செல்லப்படும். இதற்காக சுடுமண்குழாய்கள் பூமிக்கு அடியில் பதித்து வைக்கப்பட்டு இருந்தன. மேலும் தண்ணீரை பல பிரிவுகளாக அனுப்புவதற்காக இரும்பினால் ஆன நீரேற்று குழாய்களை பயன்படுத்தினர். அந்த குழாய்கள் தான் தற்போது பாலம் தோண்டிய போது கண்டெடுக்கப்பட்டுள்ளது”
.
WhatsApp share

Comments